என் மனம், அலை பாயுதே...

கற்றது கடலளவு - அத்தியாயம் 40

அத்தியாயம் 40

ப்பலில் மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாதால் குளிர்பதன அறையில் வைத்திருந்த உணவுப் பொருட்கள் எல்லாம் கெட்டுப் போய் விட்டது...

எல்லாவற்றையும் வெளியே கொட்டி விட்டார்கள். இப்போது கப்பலில் அரிசி மட்டும் மிச்சம்.. கப்பல் அங்கிருந்து அங்கோலா சென்றாக வேண்டும். ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்.

சாப்பாட்டுக்கு என்ன செய்வது..?

நாங்களெல்லாம் கவலையில் இருந்தோம்.. கேப்டன் மட்டும் கவலையே படவில்லை..

கப்பல் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு ஒரு குறுகிய நீர்வழியில் சென்று கொண்டிருந்தது.. கப்பலின் எஞ்ஜினை நிறுத்தச் சொல்லி கேப்டன் உத்தரவிட்டார்.

காரணம் புரியாமல் எஞ்ஜினை நிறுத்தினோம். எங்கள் அனைவரையும் மேலே வரும்படி அழைத்தார்.

மூன்று மணியிருக்கும். வெளியே கும்மிருட்டு. மெதுவாக தட்டுத்தடுமாறி தளத்திற்கு வந்தோம்.

தூரத்தில் தண்ணீரில் விளக்குகள் தெரிய ஆரம்பித்தன..

அருகே வரவர பத்துப்பதினைந்து சின்னச் சின்னப் படகுகள் கப்பலை நெருங்குவது தெரிந்தது. அவற்றில் பெரிய ' காடா ' விளக்குகள்.

அருகே வந்தவுடன் கப்பலின் இரும்பு ஏணி இறக்கப்பட்டடது. 'திமுதிமு' வென்று ஆட்கள், இருபது பேருக்கு மேல் இருக்கும்.

ஒவ்வொருவரும் ஆளுக்கொரு ஆட்டைக் கையில் பிடித்துக்கொண்டு வந்தனர். எல்லாம் உயிரோடு இருந்தன. கப்பலில் ஆடுகளை கட்டிப்போட்டார்கள்.

திரும்ப அவர்களின் படகுக்குள் போய் தலையில் கூடைகளை சுமந்து கொண்டு வந்தனர். காய்கறி மற்றும் மீன் கூடைகள்..

அடுத்த பயணத்திற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு கப்பல் அங்கிருந்து புறப்பட்டது.

ஒரு மாதத்திற்குப் பின், கப்பல் அங்கோலா நாட்டிலுள்ள 'லோபிதோ' துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டது.

இடையில் எஞ்ஜின் கோளாறுகள்.. நாலைந்து நாளுக்கு ஒரு முறை நடுக்கடலில் நிறுத்தி நிறுத்தி ரிப்பேரை சரி செய்து கப்பலை அங்கோலா கொண்டு போய் சேர்த்தோம்.

மறுநாள் கப்பல் துறைமுகத்துக்குள் செல்ல இருந்தது. பொழுது போவதற்காக, கப்பலின் தளத்திற்கு வந்து மீன் பிடிக்கலாம் என்று தூண்டில் போட்டோம்.

போட்ட சிறிது நேரத்தில் நம்மூர் வாளை மீன் போல இருந்த மீன்கள் நிறைய பிடிபட்டன.

( கப்பல் நடுக்கடலில் செல்லும்போது யாரும் மீன் பிடிப்பது இல்லை. அதற்கு நேரமும் கிடையாது. துறைமுகங்களில் இருக்கும் போதோ அல்லது நங்கூரமிட்டுக் காத்திருக்கும் போதோ பொழுது போவதற்க்காகத்தான் மீன் பிடிப்பது எல்லாம்.. மற்றபடி உணவுக்காக மீன்கள் முந்தைய துறைமுகத்திலேயே வாங்கி ஸ்டாக் செய்யப்பட்டவை .)

சந்தோசத்துடன் வேகவேகமாக 'மாய்க்கரா' வை (சமையல்காரர்) கூப்பிட்டு சுடச்சுட மீன்குழம்பு செய்யச் சொன்னேன்...

எப்படி இந்திய ஸ்டைலில் குழம்பு வைப்பது என்றும் சமையற்காரருக்கு சொல்லித் தந்தேன்.

நாங்கள் மீன் பிடித்ததைக் கேள்விப்பட்ட கேப்டன், அந்த மீன்களை பார்க்க வேண்டும் என்று சொன்னார்.

நாங்கள் இருந்த அவசரத்தில் அவர் வரும்வரைக்கும் பொறுமை இல்லை.. உடனே கொதிக்கும் குழம்பில் போட்டு விட்டோம்.

வேகமாக வந்த கேப்டன், குழம்பில் மீன் கொதிப்பதைப் பார்த்து, " இந்தப் பகுதியில் சில விஷ மீன்கள் இருக்கின்றன..

அதுதான் பார்த்துச் சொல்லலாம் என்று வந்தேன்.. அதற்குள் போட்டுவிட்டீர்களே" என்று சொல்லிவிட்டுப் போனார்...

நான் அதைக் கண்டுகொள்ளவேயில்லை... அவசர அவசரமாக கொஞ்சம் சாதம் எடுத்து மீன்குழம்பை ருசி பார்க்க ஆரம்பித்தேன்.

சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே வாந்தி எடுத்தேன்.

திடீரென்று உடலில் சில மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்தன. தொண்டை முதல் மார்புக்குக் கீழ்ப்பகுதி வரை கொப்புளங்கள் தோன்ற ஆரம்பித்தன.

வேகவேகமாக கேப்டனிடம் ஒடினேன்...

" நான்தான் சொன்னேன் இல்லையா.. நீ சாப்பிட்டது விஷ மீனாக இருக்கும். அதுதான் பிரச்னை.." என்றார்.

" நாளை மதியம் வரை துறைமுகத்திற்குள் செல்ல முடியாது.. அங்கே டாக்டரும் இல்லை.. இப்போது என்ன செய்வது" என்று சொல்லிவிட்டு யோசிக்க ஆரம்பித்தார்.

என் உடம்பில் கொப்புளங்கள் பெரிதாக ஆரம்பித்தன. நான் சாப்பிட்டது விஷ மீனாக இருக்கக்கூடும் என்று கேப்டன் சொன்னதைக் கேட்டு எனக்கு உடம்பு நடுங்க ஆரம்பித்தது.

மறுநாள் என்பதால் அதுவரை எதுவும் செய்யமுடியாது என்ற விஷயம் என்னை அதிகமாகவே கலவரப்படுத்தியிருந்தது.

கேப்டன் என்னை அமைதிப்படுத்தினார்..

" கவலைப் படாதே.. உயிருக்கு ஒன்றும் ஆகாது... வெறும் அலர்ஜி. இது மாதிரி கேஸ்களை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.." என்றார்.

அவர் சொன்னபின் கொஞ்சம் தைரியம் வந்தாலும் முழுவதும் சமாதானம் ஆகவில்லை. கொப்புளம் பெரிதாவது நின்று போனது..

அதனால் வலி எதுவும் இல்லை.. தொந்தரவு இல்லாவிட்டாலும், மறுநாள் காலைவரை தூக்கம் வராமல் பயத்துடன் படுக்கையில் புரண்டு கொண்டு இருந்தேன்.

அதிர்ஷ்டவசமாக மறுநாள் காலையிலேயே கப்பல் துறைமுகத்துக்குள் போனது.

அதிகாலையில் கப்பல் போய்ச் சோர்ந்தவுடன் ஏஜெண்ட் என்னை டாக்டரிடம் கூட்டிபோக வந்தான். நல்ல உயரமாக இருந்தான் ஏஜெண்ட்..

என்னுடன் துணைக்கு பஞ்சாபி மூன்றாவது இன்ஜினீயர் வந்தான்.. இருபத்தேழு வயது அவனுக்கு. 'சிங்' என்று நான் கூப்பிடுவேன்.

எங்களை ஒரு பழைய காரில் நகருக்குள் கூட்டிப் போனான் ஏஜெண்ட். காரை ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போகாமல் ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தினான்.

" தப்பாக நினைத்துக் கொள்ளாதே.. நான் சரியாகச் சாப்பிட்டு நிறைய நாள் ஆகிவிட்டது.. சாப்பிட்டு விட்டுப் போகலாமா" என்று பரிதாபத்துடன் கேட்டான் ஏஜெண்ட்.

அவன் முகம் மிகவும் சோகமாக இருந்தது. உண்மையாகவே இருக்கக் கூடும்.

அங்கோலாவில் அப்போது உள்நாட்டுச் சண்டை நடந்து கொண்டு இருந்தது. வறுமையும் திருட்டும் அங்கே அதிகம் என்று கேள்விப்பட்டிருந்தேன்.

அரிசிச் சோறும், ரங்கூன் மொச்சைக் குழம்பும் ஸ்பெஷல் உணவாம். ஹோட்டலுக்குப் போய் நன்றாக திருப்தியாக சாப்பிட்டபின், எட்டுமணிக்கு அங்கேயிருந்த ஒரு அரசாங்க மருத்துவமனைக்கு முன்னால் வண்டியை நிறுத்தினான்.

" இந்த ஊரில் பிரைவேட் டாக்டர்கள் யாரும் கிடையாது. இது ஒன்றுதான் ஹாஸ்பிடல்" என்று சொல்லிவிட்டு எங்களை அங்கேயே உட்காரச் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

காம்பவுண்ட் சுவற்றுக்கு வெளியே கையில் மிஷின் கன்கள் சுமந்த இளைஞர்கள் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.. காலை எட்டு மணியிலிருந்து மதியம் இரண்டு மணிவரை யாரும் வரவில்லை.

இரண்டு மணிக்கு ஏஜெண்ட் வந்தான்.. எங்களை அங்கிருந்த டி.பி. ஆஸ்பத்திரிக்குப் கூட்டிப் போய் உட்கார வைத்தான்.

" டாக்டர் மூன்று மணிக்கு மேல் வருவார்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்த நீக்ரோ நர்ஸ் பெண்ணைக் கூப்பிட்டு எங்களை அறிமுகப்படுத்தி வைத்தான்.

ஏஜெண்ட்டை போகச் சொல்லி விட்டேன்..

கடைசியில் மூன்று மணிக்கு மேல் அந்த நர்ஸ், டாக்டர் வந்து விட்டதாகச் சொல்லிவிட்டுப் போனாள்.

டாக்டர் மிகவும் இளமையாக இருந்தார்..

நான் என் பிரச்னையைச் சொன்னேன்.. எடுத்தவுடனேயே, "சமீபத்தில் ஏதாவது மீன் சாப்பிட்டீர்களா" என்று கேட்டார்.

நான் முதல் நாள் பிடித்த மீன் பற்றிச் சொன்னேன்.

" அது ஒரு அலர்ஜி ஏற்படுத்தும் மீன். நாங்கள் யாருமே அதைச் சாப்பிடுவதில்லை" என்றார். சில மாத்திரைகள், ஊசி மூலம் போட்டுக் கொள்ள மருந்துகள் எழுதிக் கொடுத்தார்.

" எங்களிடம் மருந்து, ஊசி, மாத்திரை எதுவும் இல்லை. ஹாஸ்பிடல் முழுதும் நேயாளிகள்தான்.. என்ன செய்வது, எங்கள் நாட்டு நிலைமை அப்படி" என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

"எங்கள் நாட்டில் நடக்கும் கலவரத்தில் யாரும் இருப்பதில்லை. டாக்டர்களே இங்கு தங்குவதில்லை. டாக்டருக்குப் படித்தவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு ஓடிவிடுகிறார்கள்" என்றார்.

நான் அவரை நினைத்து மிகவும் பெருமைப்பட்டேன்.

" இப்படி உள்ள சூழ்நிலையில் உங்களைப் போன்ற சில டாக்டர்களாவது இருந்து சேவை செய்கிறீர்களே" - என்று அவருக்கு என் பாராட்டைத் தெரிவித்தேன்.

அதற்கு அவர் சொன்ன பதில், என்னைத் தூக்கி வாரிப் போட வைத்தது.


-தொடரும்.

8 Comments:

  • "அதற்கு அவர் சொன்ன பதில், என்னைத் தூக்கி வாரிப் போட வைத்தது."
    என்ன சொல்லியிருக்கப் போகிறார்? தான் டாக்டரே கிடையாது, கம்பவுண்டர் என்றுதானே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    By , at January 19, 2007 7:20 AM  


  • போலி டாக்டர் ?! (Quiz-னு நினைத்து பதில் சொல்லிட்டேன் !!)
    பாலா

    By , at January 19, 2007 7:31 AM  


  • அவர் டாக்டரே இல்லையா...?

    By , at January 19, 2007 7:43 AM  


  • நம்ம ஊரு மாதிரி அவர் 'கம்பவுண்டர்' promoted to 'டாக்டரா?'

    By , at January 19, 2007 7:56 AM  


  • கடலில் போகும் உங்களுக்கு மீன் பிடிக்க நேரமில்லை. என்ன ஒரு காண்டிராஸ்ட் இல்லையா?!

    சரி, கடலில் வாழ்க்கையை நடத்தும் உங்களைப் போன்றவர்களுக்கு மீன்கள் பற்றி அந்த அளவு கூடவா பரிச்சியம் இருக்காது? எதை சாப்பிடலாம் கூடாது என்ற அளவில்?

    டாக்டர் கேள்விக்குத்தான் எல்லாரும் விடை சொல்லி விட்டார்களே.

    இப்பொழுது அங்கு நிலமை எப்படி? சர்வதேச அளவில் இருக்கும் தொண்டு நிறுவனங்கள் அங்கு எல்லாம் இருப்பதாகச் சொல்கிறார்களே. இவர் சென்ற பொழுது கிடையாதா?

    By , at January 19, 2007 8:02 AM  


  • கடல் முழுக்க நீர். குடிப்பதற்கு மட்டும் சொட்டு நீர் கிடையாது என்பது மாதிரி கடல் நிறைய மீன், பிடிப்பதற்கு நேரம் கிடையாது.;))

    By , at January 19, 2007 8:13 AM  


  • Hi Ganesh Sir,
    U seem to be a patient human being.
    How come u did not wait for the Captain after having said that he wanted c the fish ? It was really not expected atleast from you. Atleast in future be very cautious. We are more concerned about you.
    U r someone special for us.
    U r Kadalmannan - for us.
    NB :- Is there any reason y the size of the chapter varies ?
    May God Bless

    By , at January 20, 2007 10:37 AM  


  • அது எப்படி கேப்டன் நடுக்கடலில் உயிருடன் ஆடு,காய்கறி,மீனு எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணினார்? உங்கள் பயணம் எவ்வாறு உள்ளது

    //இப்படி உள்ள சூழ்நிலையில் உங்களைப் போன்ற சில டாக்டர்களாவது இருந்து சேவை செய்கிறீர்களே" - என்று அவருக்கு என் பாராட்டைத் தெரிவித்தேன்.//
    அவர் என்ன டாக்டரே இல்லையா?

    By , at January 22, 2007 4:02 AM  


Post a Comment

Links">


Links to this page:

Create a Link

<< முகப்பு